தமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்


தமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்

கனியிடை ஏறிய சுளையும் — முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், — காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் — தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், — தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் — ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், — வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் — பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும் — நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, — அக்கம்
பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை — என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போல் பேசிடும் மனையாள், — அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் — தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் — ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் — ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் — நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் — தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் — பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, — கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு — கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! –உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.