வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்

ஒரு பெயர்ச்சொல்லின் முதல் பகுதி வினைச்சொல்லாக வந்து, அதில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அதற்கு வினைத்தொகை என்று பெயர்.

இதில் தொகை என்ற சொல்லுக்கு, “மறைந்து வருதல்” என்று பொருள். வினைச்சொல்லின் மூன்று காலங்களும் மறைந்து வருவதால், இது வினைத்தொகை ஆயிற்று.

எடுத்துக்காட்டாக, குடிநீர் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் வினைப்பகுதியான “குடி” என்ற சொல்லானது, குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் என்று மூன்று காலங்களையும் உணர்த்தும் பொருள்களில் வருகிறது.

குடிநீர்

  • குடித்த நீர் (குடி குடித்த – இறந்தகாலம் காட்டுகிறது)
  • குடிக்கின்ற நீர் (குடி குடிக்கின்ற – நிகழ்காலம் காட்டுகிறது)
  • குடிக்கும் நீர் (குடி குடிக்கும் – எதிர்காலம் காட்டுகிறது)

மேலும் சில எடுத்துக்காட்டுகள்

  • சுடுசோறு
    • சுட்ட சோறு (சுடு சுட்ட – இறந்தகாலம் காட்டுகிறது)
    • சுடுகின்ற சோறு (சுடு சுடுகின்ற – நிகழ்காலம் காட்டுகிறது)
    • சுடும் சோறு (சுடு சுடும் – எதிர்காலம் காட்டுகிறது)
  • வளர்பிறை
    • வளர்ந்த பிறை (இறந்தகாலம்)
    • வளர்கின்ற பிறை (நிகழ்காலம்)
    • வளரும் பிறை (எதிர்காலம்)
  • ஊறுகாய்
    • ஊறிய காய் (இறந்தகாலம்)
    • ஊறுகின்ற காய் (நிகழ்காலம்)
    • ஊறும் காய் (எதிர்காலம்)
  • குளிர்நிலவு
    • குளிர்ந்த நிலவு (இறந்தகாலம்)
    • குளிர்கின்ற நிலவு (நிகழ்காலம்)
    • குளிரும் நிலவு (எதிர்காலம்)
  • மூடுபனி
    • மூடிய பனி (இறந்தகாலம்)
    • மூடுகின்ற பனி (நிகழ்காலம்)
    • மூடும் பனி (எதிர்காலம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.