குருவிரொட்டி இணைய இதழ்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் – குறள்: 6


பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
– குறள்: 6

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர், வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.



மு. வரதராசனார் உரை

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.



G.U. Pope’s Translation

Long live they blest, who’ve stood in path from falsehood freed;
His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed.

 – Thirukkural: 6, The Praise of God, Virtues