குருவிரொட்டி இணைய இதழ்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
– குறள்: 70

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்



கலைஞர் உரை

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்கவைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி, மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம்மாறாவது; தன் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ்சொல்லை, அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.



மு. வரதராசனார் உரை

மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, “இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ” என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.



G.U. Pope’s Translation

To sire, what best requital can by grateful child be done?
To make men say, ‘what merit gained the father such a son?’

– Thirukkural: 70, The Wealth of Children, Virtues