குருவிரொட்டி இணைய இதழ்

கைம்மாறு வேண்டா கடப்பாடு – குறள்: 211


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு.
– குறள்: 211

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகிலுள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை உதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ஒன்றுமில்லையே! ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு வேண்டுவன அல்ல.



மு.வரதராசனார் உரை

இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.



G.U. Pope’s Translation

Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?

Thirukkural: 211, The Knowledge of what is Befitting a Man’s Position, Virtues