குருவிரொட்டி இணைய இதழ்

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் – குறள்: 503


அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
– குறள்: 503

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்
புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரும் பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையுமாகிய குற்றங்கள் நீங்கியவரிடத்தும்; நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவுமில்லாமை காண்பது அரிதே.



மு. வரதராசனார் உரை

அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.



G.U. Pope’s Translation

Though deeply learned, unflecked by fault, ’tis rare to see, When closely scanned, a man from all unwisdom free.

 – Thirukkural: 503, Selection and Confidence, Wealth