குருவிரொட்டி இணைய இதழ்

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு – குறள்: 8


அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
– குறள்: 8

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது, அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.



மு. வரதராசனார் உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.



G.U. Pope’s Translation

Unless His feet, the Sea of Good, the Fair and Bountilful,’men gain,
‘Tis hard the further bank of being’s changeful sea to attain.

 – Thirukkural: 8, The Praise of God, Virtues