குருவிரொட்டி இணைய இதழ்

செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை


தமிழ் நாடுசெந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை

செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1


வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு — நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 2


காவிரி தென்பெண்ணை பாலாறு — தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி — என
மேவிய யாறு பலவோடத் — திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 3


முத்தமிழ் மாமுனி நீள்வரையே — நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு — செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே — அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 4


நீலத் திரைக்கட லோரத்திலே — நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை — வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்) 5


கல்வி சிறந்த தமிழ்நாடு — புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு — நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்) 6



வள்ளுவன் தன்னை உலகினுக்கே — தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 7


சிங்களம் புட்பகம் சாவக — மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி — அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்) 8


விண்ணை யிடிக்கும் தலையிமயம் — எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் — சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்) 9


சீன மிசிரம் யவனரகம் — இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் — கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 10