குருவிரொட்டி இணைய இதழ்

தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் – குறள்: 529


தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
– குறள்: 529

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முன்பு அன்பான வுறவினராயிருந்து ஏதேனுமொரு தக்க கரணியம் பற்றித் தன்னைவிட்டுப் பிரிந்து போனவர் மீண்டும் வந்து அன்பாக வுறவாடல் ; இடையில் அன்பாற் பொருந்தாமைக்கு ஏதுவாயிருந்த நிலைமை நீங்கின் தானே நேர்வதாம்.



மு. வரதராசனார் உரை

முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.



G.U. Pope’s Translation

‘Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more.

 – Thirukkural: 529, Cherishing one’s kindred, Wealth