குருவிரொட்டி இணைய இதழ்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் – குறள்: 727


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
– குறள்: 727

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அவைக்கு முன்நின்று அதற்கு அஞ்சி நடுங்குபவன் கற்ற நூல்; போர்க்களத்தில் நின்று போருக்கஞ்சும் கோழையன் பிடித்த கூர்வாளை யொக்கும்.



மு. வரதராசனார் உரை

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.



G.U. Pope’s Translation

As shining sword before the foe which ‘sexless being’ bears,
Is science learned by him the council’s face who fears.

 – Thirukkural: 727, Not to dread the Council, Wealth