குருவிரொட்டி இணைய இதழ்

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் – குறள்: 219


நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு. – குறள்: 219

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட
பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை
உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவாளன் வறியவனாதலாவது; தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே.



மு. வரதராசனார் உரை

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.



G.U. Pope’s Translation

The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.

 – Thirukkural: 219, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues