குருவிரொட்டி இணைய இதழ்

நாள்தொறும் நாடி முறைசெய்யா – குறள்: 553


நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
– குறள்: 553

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறை செய்யாத அரசன் ; நாள்தோறும் நாடிழப்பான்.



மு. வரதராசனார் உரை

நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.



G.U. Pope’s Translation

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

 – Thirukkural: 553, The Cruel Sceptre, Wealth