குருவிரொட்டி இணைய இதழ்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி – குறள்: 502


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு.
– குறள்: 502

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து ; நடுநிலையின்மை , விரைமதியின்மை அன்பின்மை , மடி , மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி , தமக்குப் பழிவந்து விடுமோ என்று அஞ்சும் நாணுடையவ னிடத்ததே அரசனது தெளிவு.



மு. வரதராசனார் உரை

நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.



G.U. Pope’s Translation

Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide.

 – Thirukkural: 502, Selection and Confidence, Wealth