குருவிரொட்டி இணைய இதழ்

கல்லா தவரின் கடைஎன்ப – குறள்: 729


கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.
– குறள்: 729

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,
எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்திருந்தும், நல்ல அறிஞரவைக்கு அஞ்சி அங்கு அவற்றை எடுத்துக் கூற மாட்டாதார்; கல்லாதவரினுங் கடைப்பட்டவர் என்பர் அறிஞர்.



மு. வரதராசனார் உரை

நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

Who, though they’ve learned before the council of the good men quake,
Than men unlearn’d a lower place must take.

 – Thirukkural: 729, Not to dread the Council, Wealth