குருவிரொட்டி இணைய இதழ்

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் – குறள்: 501


அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.
– குறள்: 501

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனால் ஆட்சித்துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன் அறமும் பொருளும் இன்பமும் உயிர்க்கேடு பற்றிய அச்சமும் ஆகிய; நான்கு தேர்திறத்தால் மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான்.



மு. வரதராசனார் உரை

அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.



G.U. Pope’s Translation

How treats he virtue, wealth and pleasure? How , when life’s at stake, Comports himself? This four – fold test of man will full assurance make.

 – Thirukkural: 501, Selection and Confidence, Wealth