குருவிரொட்டி இணைய இதழ்

அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது – குறள்: 1009


அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
– குறள்: 1009

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால்; உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெய்தலை யொழிந்து; தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து ; வறியார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செய்யாது ; வருத்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.



மு. வரதராசனார் உரை

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.



G.U. Pope’s Translation

Who love abandon, self afflict, and virtu’s way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.

 – Thirukkural: 1009, Wealth without Benefaction, Wealth