குருவிரொட்டி இணைய இதழ்

வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646


வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள்.
– குறள்: 646

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும்போது அவர் பின்னுங்கேட்க விரும்புமாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி; பிறர் சொல்லைத்தாம் கேட்கும்போதுமட்டும், அதில் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக்கணவொழுங்கும் இல்லாதிருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல்; குற்றமற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம்.



மு. வரதராசனார் உரை

பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.



G.U. Pope’s Translation

Charming each hearer’s ear, of others words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

 – Thirukkural: 646, Power of Speech, Wealth