குருவிரொட்டி இணைய இதழ்

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் – குறள்: 932


ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
குறள்: 932

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு
தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக்கும் மீன் போல, முதலாட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற்றுப் பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகி வாழ்நாள் குன்றியிறக்கும் சூதாடிகட்கும்; அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது.



மு. வரதராசனார் உரை

ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?



G.U. Pope’s Translation

Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?

Thirukkural: 932, Gambling, Wealth.